தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான தொழில் திணைக்களத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (19) கல்முனை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உணவகம் ஒன்றில் வைத்து, சந்தேக நபரான உத்தியோகத்தர் தொழில் திணைக்களத்தில் சேவையொன்றை பெறும் பொருட்டு நபர் ஒருவரிடம் 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சமாக பெற்றுக்கொண்டபோதே மாறு வேடத்தில் கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கடந்த வியாழக்கிழமை (18) கைதாகியுள்ளார்.
கைதான நபர் ஏற்கனவே குற்றச்செயல் ஒன்றுக்காக அரச சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டு பின்னர், மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.

