பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற இருவரை முச்சக்கர வண்டி சாரதியின் உதவியுடன் மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் .
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெண்ணொருவர் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண்ணை வழிமறித்து அவரிடமிருந்த தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
இதன்போது குறித்த வீதியால் மீரிகம நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர், பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றவர்களை தப்பிச் செல்லவிடாது வழிமறித்துள்ளார்.
பின்னர் குறித்த இருவரையும் முச்சக்கர வண்டி சாரதியுடன் பொதுமக்கள் இணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில், பொலிஸார் அவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர் .
இந்த செயலை பாராட்டும் முகமாக விகாரையொன்றில் இடம்பெற்ற பூஜை நிகழ்வின் போது குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கு பாராட்டி பண பரிசில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

