சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் முக்கிய நிபந்தனைகளை புறக்கணித்து செயற்படுகிறது.
ஒரு இலட்சம் கோடி ரூபாய் நிலுவை வரியை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கண்டியில் ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாடும், நாட்டு மக்களும் இன்று பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு ராஜபக்ஷர்களே காரணம். இதனை அரசியலுக்காக குறிப்பிடவில்லை. ராஜபக்ஷர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என்பதை உயர்நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.
வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாக ராஜபக்ஷர்கள் குறிப்பிடுவது நகைப்புக்குரியது. நாட்டையும், நாட்டு மக்களையும் அதளபாதாளத்துக்குள் தள்ளியதை ராஜபக்ஷர்கள் மறந்து விட்டார்கள்.
2019 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் 69 இலட்ச மக்கள் செய்த தவறால் ஒட்டுமொத்த மக்களும் இன்று நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்பன். முறையற்ற நிர்வாகத்தால் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள ராஜபக்ஷர்கள் அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிக்கப்பட வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளை செயற்படுத்துவதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வற் வரி ஊடாக அரச வருமானத்தை 60 கோடி ரூபா வரை பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வர்த்தகர்கள் ,அரசியல் செல்வாக்கு உள்ளவர்களிடமிருந்து மதுவரி திணைக்களம்,தேசிய இறைவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபா வரியை அறவிடவில்லை.இந்த நிலுவை வரியை அறவிட அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தெரிவு செய்யப்பட்ட வகையில் செயற்படுத்தப்படுகிறது. நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் விடயங்கள் மாத்திரம் செயற்படுத்த அவதானம் செலுத்தப்படுகிறது.வங்குரோத்து நிலையிலும் செல்வந்தர்களுக்கு விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

