புத்தாண்டுக்கு முன் ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக அறிவிப்போம்

174 0

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக அறிவிப்போம்.ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதியுடன் ஒன்றிணைவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஹரிசன் தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடியின் போது அரசாங்கத்தை பொறுப்பேற்காமல் தப்பிச் சென்றவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு தயார் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். இந்த ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில்  போட்டியிடும் தகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாத்திரமே உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசாங்கத்தை பொறுப்பேற்பதில் ஆசை ஆனால் பயம்.இவரது தயக்கத்துக்காக நாட்டை நெருக்கடிக்குள்ளாக்க முடியாது என்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்.

பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது,ஆகவே பொருளாதார ரீதியில் ஸ்திரமடைய வேண்டுமாயின் தற்போதைய பொருளாதார கொள்கைகள் தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டும்.அதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரச நிர்வாகம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும்.

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக அறிவிப்போம்.ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதியுடன் ஒன்றிணைவார்கள்.ஜனாதிபதியின் பொருளாதார கொள்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அதனை பகிரங்கமாக குறிப்பிட மறுக்கிறார்கள் என்றார்.