நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகே மாநகராட்சி மேயர் மகேஷ், கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். அப்போது, அவரது கார் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான நவீன்குமார் மற்றும் இருவர் காரில் வந்துள்ளனர். மேயரின் காரை ஒட்டி, நவீன்குமார் தனது காரை நிறுத்தியுள்ளார்.
இதைப் பார்த்த மேயரின் தபேதார் மணிகண்டன் (37), இதை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார், தபேதார் மணிகண்டனையும், மேயரையும் தகாத வார்த்தையால் திட்டியதுடன், தனது காரில் இருந்த கத்தியை எடுத்து மேயருக்கும், மணிகண்டனுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நேசமணி நகர் போலீஸில் மணிகண்டன் புகார் செய்தார். இதன்பேரில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நவீன்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

