வவுணதீவில் கைதான இருவரையும் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

202 0
மட்டக்களப்பு வவுணதீவில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க அனுமதியளித்ததுடன் எதிர்வரும் 24 ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும்  மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (10)  உத்தரவிட்டார்.

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா  (குகன்) மற்றும் அவரது மகன் ஆகியோர் வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளருக்கு  காலில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளினால்  மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில், நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை எடுத்துக் கொண்டனர்.

அதன்போது, மாவட்ட அமைப்பாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதால் அவர் நீதிமன்றில் ஆஜராகாத நிலையில் அவரது மகன் ஆஜராகி இருந்தார்.

இந்நிலையில், கொழும்பில் இருந்து வருகைதந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கைது செய்யப்பட்டவர்களின் கையடக்க தொலைபேசியில் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளமை தெரியவந்தமையால்  நீதவான் மேலதிக விசாரணைக்கு அனுமதியளித்ததுடன் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.