மத்திய வங்கியின் ஆளுநர் மீது எமக்கு நம்பிக்கையில்லை

141 0

நாட்டின் நிதி நிலைமை குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை. உண்யை மூடி மறைத்தார்.

ஆகவே மத்திய வங்கி ஆளுநர் மீது எமக்கு நம்பிக்கையில்லை என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய  அமைச்சர் பந்துல குணவர்தன,நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் முக்கிய விடயங்களை குறிப்பிட்டுள்ளார். ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உண்டு என  ஆளுநர்  குறிப்பிட்டுள்ளார்.ஆகவே நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் அவர் குறிப்பிட்ட கருத்துக்கள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்த வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து  எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல, பாராளுமன்றத்திற்கே நிதி அதிகாரம் உள்ளதாக  மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகின்றார்.

ஆனால் நாடு வங்குரோத்தடைந்துள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் ஒருபோதும் இந்த பாராளுமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டின் நிதி நிலைமையின் உண்மையை அவர்  மூடி மறைத்தார்.

நிதி நிலைமை தொடர்பில் 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில்  பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது கையிருப்பு எவ்வளவு இருக்கின்றது என்று கேட்டேன். 20 மில்லியன் டொலர்கள் இருப்பதாக கூறினார். அப்போதே நாடு வங்குரோத்தடைந்துள்ளது என்பதனை அறிந்துகொண்டோம். எனவே அவ்வாறான மத்திய வங்கி ஆளுநர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.