காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவியின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

20 0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிஸாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், வவுனியா மாவட்ட தலைவி ஜெனிற்றா விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரியும் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் ஜனாதிபதி வருகையின்போது நியாயம் கேட்கச் சென்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவி கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு புனித இராஜப்பர் தேவாலயத்துக்கு முன்பாக ஆரம்பமானது.

குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சென்று நிறைவு பெற்றிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘பொலிஸ் அராஜகம் ஒழிக’, ‘விடுதலை செய் விடுதலை செய் ஜெனிற்றாவை விடுதலை செய்’, ‘சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு’, ‘ரணில் அரசே நட்ட ஈடு வழங்கி எமது பேராட்டத்தை நிறுத்தக் கனவு காணாதே’, ‘பாதிக்கப்பட்ட உறவான ஜெனிற்றாவை உடன் விடுதலை செய்’, ‘ஜனநாயக வழியில் போராடுபவர்களை கைது செய்வதுதான் ரணில் அரசின் நல்லிணக்கமா?’, ‘சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பினை வெளிப்படுத்தி கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

இப்போராட்டத்தில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.