ராமர் கோவில் கும்பாபிஷேகம்: 15 அடி உயர அணில் சிலை அயோத்திக்கு அனுப்பிவைப்பு

45 0

அயோத்தியில் வருகிற 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி பெங்களூருவை சேர்ந்த தொழில்அதிபர் 15 அடி உயர அணில் சிலையை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-பெங்களூரு நாகசந்திரா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே பிரபல என்ஜினீயரிங் நிறுவனத்தை நடத்தி வருபவர் சி.பிரகாஷ். தொழில் அதிபரான இவர் அயோத்தி ராமர் கோவில் திறப்பையொட்டி, ராமருக்கு உதவிய அணிலை நினைவுகூரும் வகையில் அணில் சிலையை காணிக்கையாக வழங்க முடிவு செய்தார்.இதையொட்டி 15 அடி உயரம், 7½ அடி அகலத்தில் அணில் சிலை வடிவமைக்கும் பணியை கல்யாண் ரத்தோட் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

2½ டன் கார்ட்போர்டு ஸ்டீலால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த அணில் சிலை முழுவடிவம் பெற்றதை தொடர்ந்து நேற்று நாகசந்திராவில் இருந்து ராட்சத லாரி மூலம் இந்த அணில் சிலை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தொழில் அதிபர் சி.பிரகாஷ், அவரது மனைவி பாரதி, சிலை வடிவமைப்பாளர் கல்யாண் ரத்தோட், இந்து அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.இதுகுறித்து தொழில் அதிபர் சி.பிரகாஷ் கூறுகையில், அணில் சிலை வருகிற 11-ந்தேதி அயோத்திக்கு சென்றடையும். அயோத்தி ரெயில் நிலையம் முன்பகுதியில் வருகிற 12-ந்தேதி நிறுவப்பட உள்ளது. இதற்கு ரெயில்வே துறை அனுமதி வழங்கியுள்ளது என்றார்.

இதுதொடர்பாக அணில் சிலையை உருவாக்கிய கல்யாண் ரத்தோட் கூறுகையில், இந்த அணில் சிலையை முதலில் காகிதத்தில் உருவாக்கினோம். அதன் பிறகு தான் கார்ட் போர்டு ஸ்டீலால் அணில் சிலையை உருவாக்க முடிந்தது. 100 ஆண்டுகள் ஆனாலும் எந்த சூழ்நிலையிலும் இந்த அணில் சிலை சேதம் அடையாமல் இருக்கும். முதலில் அட்டைப்பெட்டியால் அணில் சிலையை உருவாக்கி பின்னர் ஸ்டீலால் வடிவமைத்துள்ளோம். இதை பராமரிக்கும் செலவும் குறைவு என்றார்.