தென்னிலங்கை முதலீட்டு தளமாக மாற்றப்படும் பூநகரி திட்டம்

68 0

பூநகரி அபிவிருத்தி திட்டம் ரணில் அரசின் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகின்றதா என்ற கேள்வி எழுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று(06.01.2024) இடம்பெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 24 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயம் செய்து பெரிய ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்.பூநகரியில் அபிவிருத்தி திட்டம் செய்யப் போவதாக அங்கு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். 500 மில்லியன் ரூபாய் அவசர அவசரமாக ஒதுக்கபடபட்டு பூநகரி அபிவிருத்தி என்ற பெயரில் அது அரங்கேற்றப்படுகின்றது.

அந்த அபிவிருத்தி தொடர்டபான கலந்துரையாடல் அந்த பிரதேசத்து மக்களுடன் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த 2 ஆம் திகதி பூநகரி பிரதேச சபை மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஒழுங்குபடுத்தப்பட்ட அக் கூட்டத்தில் வடமாகாண அதிகாரிகள் கலந்து கொண்டனர். அத்திட்டத்தை அப்போது விளங்கப்படுத்த முற்பட்டிருந்தார்கள்.அந்த திட்டம் தயாரித்து அவர்கள் கொண்டு வந்திருந்தார்கள். அந்த திட்டம் தயாரிப்பதற்கு முன்னதாக அந்த பிரதேசத்து மக்களுடன் எந்தவிதமான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

அந்தக் கூட்டம் சிவில் அமைப்புக்களுடன் என கூறப்பட்டாலும் வெறும் ஈபிடிபி ஆதரவாளர்கள் 8- 10 பேருடன் தான் நடைபெற்றது.

ஏனையவர்கள் அனைவரும் திணைக்களங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களாக இருந்தார்கள்.

அந்த அபிவிருத்தி அந்த பிரதேசத்திற்கு பொருமத்தமானதா இல்லை என கருத்துச் சொல்லக் கூடிய எவரும் அங்கு கலந்து கொண்டிருக்கவில்லை.

பூநகரி, பொன்னாவெளி என்ற இடத்தில் ஒரு சில வருடங்களாக சீமெந்துக்காக சுண்ணக்கல் அகழ்தல் தொடர்பான பிரச்சினை போய் கொண்டு இருகின்றது.

அகழ்வுக்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் அந்த பூநகரிப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.” என்றார்.