பாராளுமன்றத்தை கலைக்கும் திட்டம் இல்லை

164 0

பாராளுமன்றத்தை இந்த மாதத்தில் கலைக்கும் திட்டம் இல்லை. சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெற இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனவரி மாத்தத்துக்குள் பாராளுமன்றத்தை கலைக்கப்போவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மை இல்லை. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு செப்டெம்பர் மாதம் கோரப்பட்டு, ஒக்டோபரில் தேர்தல் இடம்பெற வேண்டும். அதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே ஆரம்பமாக இடம்பெற இருக்கிறது.

அத்துடன் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. என்றாலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் கலந்துரையாடி பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. இருந்தபோதும் தற்போதுள்ள நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்படாது என்றே நினைக்கிறேன்.

ஏனெனில் நாட்டை சரியான வழிக்கு கொண்டுசென்று பாெருளாதாரத்தை ஸ்திரநிலைக்கு கொண்டுவர வேண்டும். தேர்தலுக்கு முன்னர் வற்வரி, வருமான வரிகளை குறைத்து பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அதற்காகவே ஜனாதிபதி கடுமையாக முயற்சித்து வருகிறார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி பயணிக்கும் பாதையை சர்வதே நாணய நிதியம் உள்ளிட்ட அனைத்து நிது நிறுவனங்களும் அனுமதித்திருக்கிறது.

அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமையவே வற்வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரம் கடந்த வருடம் அரசாங்கம் எதிர்பார்த்த அரச வருமானம் அளவை அடைந்திருக்கிறோம். இந்த வருடம் தேசிய வருமானம் 4ஆயிரம் பில்லியன் என்ற இலக்கை அடைவதே அரசாங்கத்தின் திட்டமாகும். இந்த திட்டத்தை நெருங்கும்போது மக்கள் எதிர்பாரக்கும் நிவாரணங்களை வழங்கி, பொருட்களின் விலைகளை குறைவதற்கு முடியுமாகும்.

இவை அனைத்தையும் மேற்கொண்டுவிட்டு பாராளுமன்ற தேர்தலுக்கு செல்ல முடியும். எமது இந்த திட்டத்தின் மூலம் நிச்சயமாக பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்றார்.