ஜனாதிபதி வடக்கு விஜயம் ; நிரந்த நியமனம் கோரி வடக்கு, கிழக்கில் ரயில்கடவை காப்பாளர்கள் பணிப்புறக்கணிப்பு

129 0
நாட்டின் ஜனாதிபதியின் வடக்குக்கான  வியஜம் இடம்பெறவுள்ள நிலையில் தமக்கான நிரந்த நியமனம் கோரி  வடக்கு கிழக்கில் உள்ள ரயில் கடவை காப்பாளர்கள்  நாளை வியாழக்கிழமை (04) அதிகாலை 6 மணி தொடக்கம் 06.01.2024 அதிகாலை 6 மணி வரையான 48 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக  வடக்கு, கிழக்கு ரயில் கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ராஜ்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ராஜ்குமார் இன்று புதன்கிழமை (03) முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்  சந்திப்பு ஒன்றினை நடத்தி குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி விஜயத்தினை முன்னிட்டு தமக்கான நிரந்த நியமனம் கோரி வடக்கு கிழக்கில் உள்ள ரயில்கடவை காப்பாளர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளார்கள். இதனால் ரயில் கடவைகளில் பயணிக்கும் மக்கள் அவதானமாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

நாளையதினம் அதிகாலை 6 மணி தொடக்கம் வெள்ளிக்கிழமை அதிகாலை 6.00 மணி வரை பணிப்புறுக்கணிப்பில் ஈடுபடவுள்ளார்கள். இதனால் மக்கள் அவதானமாக பயணங்களை மேற்கொள்ளவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 2064 புகையிரத கடவை ஊழியர்களை அடிமைகளாக நயவஞ்சகமாக நடத்தப்பட்டு வருவதை கண்டித்து, 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் வடமகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரயில் கடவை ஊழியர்களை இலங்கை பொலிஸாரிடம் இருந்து விடுவிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரையான 11 ஆண்டு காலமாக பொலிசாரால் 6 மாதங்களில் நிதந்தர நியமனம் வழங்கப்படும் என்று பி.ஏ.சி 25 கீழ் 2014 வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஆறுமாத காலத்திற்குள் அரச திணைக்களங்களில் சேவையாற்றும் நபர்களுக்கு அந்த திணைக்களத்தில் நிதந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் உள்வாங்கப்பட்ட 2064 ரயில் கடவை ஊழியர்கள் நாள் ஒன்றிங்கு 250 ரூபா படி மாதம் 7,500 ரூபா வேதனத்திற்கு எதிர்காலத்தினையே அர்ப்பணித்து நாட்டு மக்களை பாதுகாக்கின்ற கடமையில் ஈடுபட்டு வருகின்ற 2064 ஊழியர்களுக்கும் உத்தரவாதம் அற்ற நிலையில் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் ஊழியர்கள் தவித்து நிக்கின்றார்கள்.

உடனடியாக இலங்கை பொலிஸாரின் அடாவடித்தனத்தில் அடிமைத்தனத்தில் இருந்து எங்களின் ஊழியர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி நிக்கின்றோம். இன்றைய பொருளாதார நிலையில் 250 ரூபாவிற்கு ஒரு வேளை அரிசியினை கொள்வனவு செய்யமுடியாத சம்பளத்தினை கொண்டு குடும்பங்களை நடத்துவது எவ்வாறு பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை கொண்டு நடத்துவது எவ்வாறு என்பது இன்று இருக்கக்கூடிய அரச அதிகாரிகள் ஜனாதிபதி அவர்களின் மூளைக்கு எட்டவில்லையா என்பது மனவேதனை அளிக்கின்றது.

உடனடியாக மக்களின் வாழ்கை நிலையினை கவனத்தில் கொண்டு இன்று  வற் வரி அதிகரிப்பினை கவனத்தில் கொள்ளாது வரிச்சுமையினை மக்கள் மீது திணிக்காது மக்களின் எதிர்காலத்தினை சிந்தித்து அன்றாட வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தும் விதத்து அவர்களின் வாழ்க்கையினை மாற்றியமைக்கும் முகமான திட்டங்களை முன்வைக்க வேண்டும்.

விசேடமாக 250 ரூபா சம்பளத்தினை பெற்றுக் கொண்டு இந்த நாட்டிற்காக தங்களின் எதிர்காலத்தினை பிள்ளைகளின் எதிர்காலத்தினை இழந்து மிகவும் பொருளாதார நலிவிற்கு உட்பட்டு இருக்கின்ற ரயில் கடவை ஊழியர்களின் வாழ்க்கையில் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தினை ஏற்படுத்தும் முகமாக ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தினை பயன்படுத்தி உடனடியாக அவர்களுக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டும் அவர்களின் சம்பள உயர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

பொலிஸாரின் கீழ் இருக்கக்கூடிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று புகையிரத திணைக்களத்திற்குள் அவர்களுக்கு நிதந்தர நியமன வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி 48 மணிநேர பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவிருக்கின்றோம்.

அத்துடன் உடனடி தீர்வு எட்டப்படாத சந்தர்ப்பத்தில் இந்த நாடு பாரதூரமான பின்விளைவுகளை சந்திக்கும் இந்த அரசு பின்விளைவுகளை சந்திக்கும் புகையிரத திணைக்களம் ஸ்தம்பிக்கும் என்பதை வலியுறுத்தி நிக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.