இலங்கை சமூக பொலிஸ் குழுக்களை வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும்

37 0

இலங்கையின் சமூக பொலிஸ் குழுக்களை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கனடாவின் பீல் பிராந்தியத்தின் பொலிஸ் பிரதானி நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனடாவின் பீல் பிராந்தியபொலிஸ் பிரதானி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுப்பட்டார்.

இதன்போது, இரு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான பல வியடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அலஸின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக பொலிஸ் பிரிவுகளை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கனேடிய பொலிஸ் பிரதானி பாராட்டுக்களை தெரிவித்தார்.  இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்த ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்தார். அத்துடன் இரு நாடுகளின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பிலும் பல முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

1973 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த நிஷான்,  1975 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவின் உறவினராவார். இவர் கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆவார். தற்போது கனேடியபீல் பிராந்திய  பொலிஸ் பிரதானியாக  கடமையாற்றிய நிஷான் இலங்கைக்கு பெருமை சேர்ப்பதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்திற்கு வருகை தந்த நிஷான் துரையப்பாவுக்கு விசேட பொலிஸ் மரியாதை செலுத்தப்பட்டதுடன் விஜயத்தை நினைவு கூறும் வகையில் விசேட நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டது.