முன்னாள் இராணுவ வீரர் பொலிஸார் மீது கைக்குண்டை வீச முயற்சி!

356 0
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் இராணுவ விசேட அதிரடிப்படையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கெக்கிராவ பொலிஸாரால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது சந்தேக நபர் தான் வைத்திருந்த, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டை பொலிஸார் மீது வீச முற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்கிராவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெக்கிராவ நிகினியாவ மேகவெவ பிரதேசத்திலுள்ள வயலில் மறைந்திருந்தபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், அவ்வேளை அவர் தனது ஜாக்கெட் சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த கைக்குண்டினை எடுத்து பொலிஸ் அதிகாரிகள் மீது வீச முற்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைக்குண்டை வீச முற்பட்டபோது பொலிஸார் புத்தி சாதுரியத்துடன் செயற்பட்டதால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என கூறிய கெக்கிராவ பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.