விஜயகாந்தின் மரணத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இரங்கல்

129 0

ஈழத்தமிழர்களை ஆழமாக நேசித்த விஜயகாந்தின் மறைவு ஈழத்தமிழ் மக்களுக்குப் பேரிழப்பு என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரைத்துறையில் 40 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவரும், தமிழக தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும் முன்னைய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தின் மறைவு உலகத் தமிழர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் மீதும், தேசியத் தலைமை மீதும் மிகுந்த அன்பும் மரியாதையும் பற்றும் கொண்டு, தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்திருந்தார்.

ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகத்தமிழர்களின் மனங்களிலும் உயரிய மரியாதைக்குரியவராக இருந்தவர்.

இந்நிலையில், அவரது மறைவானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய தாமும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரது இழப்பிலும் குடும்பத்தின் துயரிலும் பங்கெடுத்துக் கொள்வதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் குறிப்பிட்டுள்ளனர்.