புரட்சிக் கலைஞர் கலைமாமணி விஜயகாந்த் அவர்களுக்கு கண்ணீர்வணக்கம்.- தமிழீழ விடுதலைப் புலிகள்.

291 0

 

2912.2023

புரட்சிக் கலைஞர் கலைமாமணி விஜயகாந்த் அவர்களுக்கு
கண்ணீர்வணக்கம்

தமிழின உணர்வாளரும் பிரபல திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத்தின் தலைவருமாகிய புரட்சிக் கலைஞர் கலைமாமணி விஜயகாந்த் அவர்கள் 28.12.2023 அன்று சாவடைந்துள்ளார் என்ற செய்தி, தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியினையும் ஆழ்ந்த துயரினையும் ஏற்படுத்தியுள்ளது. இயல்பாகவே தமிழ்மொழி மீது பற்றுக்கொண்ட விஜயகாந்த் அவர்கள், கல்விகற்கும் காலத்திலிருந்தே இந்தி மொழித்திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார்.
ஈழத்தமிழர்கள் மீது பேரன்பு கொண்ட விஜயகாந்த் அவர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை முழுமையாக ஆதரித்து வந்ததோடு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது பெருமதிப்பும் அன்பும் கொண்டவராகத் திகழ்ந்தார். ‘‘போராடடா ஒரு வாளேந்தடா” எனும் பாடல் மூலமாகப் பல்லாயிரக்கணக்கான தமிழீழத்து இளையோர்களின் மனங்களில் இடம்பிடித்ததோடு, இனவெறிச் சிங்கள அரசின் வன்முறையை எதிர்த்துப் போராடத்துணிந்தவர்களது மனங்களில் புரட்சித்தீ வளர உந்துவிசையாகவும் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள் விளங்கினார் என்றால் அது மிகையாகாது. நூற்றைம்பது திரைப்படங்களுக்கு மேல் நடித்த விஜயகாந்த் அவர்கள், 1999ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த காலங்களில் பல திரைப்படக்கலைஞர்களைத் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாகச் செயற்படவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பினைக் கண்டித்து 19.05.2009 அன்று, மிகத் தெளிவான அறிக்கை ஒன்றினை விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டிருந்தார். அவ்வறிக்கையில், தமிழீழ மக்கள் மீது சிங்கள இனவெறி அரசினால் நிகழ்த்தப்பட்டது இன அழிப்பு என்பதனைச் சுட்டிக்காட்டியதோடு, துணைநின்ற இந்திய மத்திய அரசினையும் மிகத்துணிவோடு கண்டித்திருந்தார்.
2011ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதினாறாவது எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் அவர்கள் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைமாமணி விஜயகாந்த் அவர்களது இழப்பு, ஈடுசெய்ய முடியாதது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கோடிக்கணக்கான அவரது திரையுலக இரசிகர்களுக்கும் தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் சார்பாகவும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அனைவரது துயரிலும் நாமும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.