முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் வாகன விபத்து ; மாணவி படுகாயம்

44 0
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியினை கடக்க முற்பட்ட மாணவி மீது டிபெண்டர் வாகனம் மோதியதில் மாணவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பரந்தன் வீதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற டிபெண்டர் வாகனம் வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது மோதியதில் மாணவியொருவர் படுகாயமடைந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி வள்ளிபுனம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தினை ஏற்படுத்திய களுத்துறையைச் சேர்ந்த 54 வயதுடைய வாகனத்தின் சாரதி புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தில் வந்தவர்கள் இ.போ.ச பேருந்தினை மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தர்கள் என்பதும் குறிப்பிடதக்கது.