யாழில் பொலிஸாரினால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நபர் கசிப்புடன் கைது

58 0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் 15 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கோண்டாவில் கொட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த நபரே கோப்பாய் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், வழக்கு தவணைகளுக்கு மன்றில் முன்னிலையாகாத மூன்று வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றங்களினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கோண்டாவில் பகுதியில் பதுங்கியுள்ளதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ததுடன், கைது செய்யப்படும் போது, அவரது உடைமையில் இருந்து 15 லீட்டர் கசிப்பினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.