ஜோர்தானில் சிக்கி தவிக்கும் 350 இலங்கை பிரஜைகள்

143 0
ஜோர்தானில் சஹாபி பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 350 இலங்கையர்கள் சம்பளம் வழங்கப்படாமையால் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களுக்கு கடந்த 18 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. இதன்காரணமாக   தங்களுடைய தங்கும் விடுதிகளில் உணவு மற்றும் தண்ணீரின்றி சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களது நிலைமை குறித்து ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித விசாரணையும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் காணொளி மூலம் அவல நிலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே, உயிரிழப்புகள் ஏற்படும் நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் தம்மை நாட்டுக்கு அழைத்து செல்லுமாறு இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.