மருந்து இறக்குமதி, விநியோகத்தில் முன்னேற்றம் – சுகாதார அமைச்சின் செயலாளர்

170 0

மருந்துகளின் இறக்குமதி மற்றும் விநியோகத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த இரண்டு வாரங்களில் மருந்து இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த காலங்களில் மக்களின் சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமான மருந்துகளை விநியோகிப்பதில் பல பிரச்சனைகள் மற்றும் தடைகள் காணப்பட்டன.

எவ்வாறிருப்பினும் கடந்த இரண்டு வாரங்களில், நாட்டிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளின் நிலைவரங்களை ஆராய்ந்த போது அவற்றுக்கு கிடைக்கப் பெற்ற மருந்துகளின் அளவு போன்றவற்றில் முன்னேற்றம் காணப்பட்டது.

மருந்துகளின் விநியோகம் குறித்து ஆழமான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கமையவே இந்த முன்னேற்றம் அடையாளங் காணப்பட்டுள்ளது.

எனினும் குறிப்பிட்ட சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.