இறக்காமம் வயல் காணியிலிருந்து சடலம் மீட்பு : இரு இளைஞர்கள் கைது

42 0
அம்பாறை மாவட்டம், இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகுதியிலுள்ள ஒரு வயல் காணியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இனந்தெரியாத நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக நேற்று சனிக்கிழமை (23) காலை இறக்காமம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மேலதிக விசாரணைகளை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

உயிரிழந்தவர் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க முஹம்மது சித்தீக் ஹாஜியார் என்பவரே என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வேலை ஒன்றினை முடித்த பின்னர், அதற்கான  கூலி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கு  காரணமாக இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன் இந்த கொலை கடந்த வெள்ளிக்கிழமை (22) காலை இடம்பெற்று, பின்னர், அருகிலுள்ள வீடொன்றில் சடலம் மறைக்கப்பட்டு, நேற்று சனிக்கிழமை  அதிகாலை வேளையில் கரும்பு காணிக்குள் வீசப்பட்டிருப்பது பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை (22) காலை வாங்காமம் பகுதியில் உள்ள தனது பண்ணையை  பார்வையிடுவதற்காக சென்ற குறித்த நபர், வீடு திரும்பாத நிலையில், அவரை உறவினர்கள் தேடிச் சென்றபோதே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.