யாழ். குடத்தனை கிழக்கில் இரவிரவாக வீடுகளில் வாள் வெட்டுக் குழு தேடுதல் : வாள் வெட்டில் ஒருவர் காயம்

30 0

யாழ்ப்பாணம், குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவத்தின் தொடர்சியாக வியாழக்கிழமை (21) வாள் வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இதில் அதே இடத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை புதன்கிழமை (20) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை (21) இரவு வாள் வெட்டு குழு ஒன்று தமது எதிராளிகளை தேடி குடத்தனை கிழக்கு, அம்பன் கிழக்கு பகுதிகளில் தேடுதல் நடாத்தியதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குடத்தனையில் வியாழக்கிழமை (21) மதியம் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை பருத்தித்துறை பொலிசாரும் வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடி படை சென்றபின்னர் நேற்றிரவு பதினொரு மணிவரை வீடுகள் மீது தாக்குதல், எதிரணியை தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உரியதரப்புக்கள் மேற்கொள்ளவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.