அரசியல் அதிகாரத்தை பெற திரட்சியாக ஒன்றுபட முடியாத நிலையில் உள்ளோம்: பேராசிரியர் ரகுராம்

59 0

விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் எங்களுக்கான அரசியல் அதிகாரத்தை பெறுவது தொடர்பில், திரட்சியாக ஒன்று படமுடியாத ஒரு துர்பாக்கியசாலிகளாக உள்ளோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் தெரிவித்துள்ளார்.

சங்கனை சிவப்பிரகாசம் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கழந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,உண்மையில் அரசியல் என்ற சொல்லுக்குள் உள்ள ஆழமான அர்த்தங்களை உற்று நோக்க வேண்டும். அந்த வகையில் இந்த அதிகாரம், அரசியல், அரச அறிவியல் இந்த பதங்களுக்கு பின்னால் உள்ள மிகப்பெரிய வெளியை மாணவர்கள் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரசியல் என்பது கற்றுத் தேர்ந்த துறையாக இல்லாமல் வாழ்க்கை முறையாகவும், வாழ்வினுடைய பல பரிமாணங்களில் நகர்த்தப்படும் ஒரு வெளியாகவும் இருக்கின்ற போது அரசியலை நாங்கள் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்ற அந்த பெரிய விழிப்புணர்வு எங்களுக்கு தேவையாக இருக்கின்றது.

உண்மையில் ஒரு முரண்நகையான விடயம் வடக்கு கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் அதிகமான மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிக்கின்ற துறையாக அரச அறிவியல் இருக்கின்றது.

அதேபோல பல்கலைக்கழகத்திலும் அரச அறிவியலை தேர்ந்தெடுத்து படிக்கின்ற மாணவர்களது எண்ணிக்கை அதிகம்.

ஆனால் எங்களுடைய சமூகத்தில் அரசியல் விழிப்புணர்வு இருக்கின்றதா என்ற மிகப்பெரிய கேள்வி இருக்கின்றது.

இந்த இடைவெளி எப்படி அமைந்திருக்கின்றது என்றால், 30 வருட கால அல்லது அதற்கும் அதிகமான விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் எங்களுக்கான அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான ஒரு முழு முயற்சியிலே நாங்கள் திரட்சியாக ஒன்று படமுடியாத ஒரு துர்பாக்கியசாலிகளாக  இருக்கின்றோம்.

நாடாளுமன்ற கதிரைகளை சூடேற்றியவாறு இன்றும் எமது அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்.

ஒரு கட்சி சார்ந்து அதைச் சொல்லும் பொழுது, எங்களுடைய கட்சி சார்பிலே ஒரு விளக்குமாறினை நிறுத்தினால் கூட மக்கள் அவரை தெரிவு செய்து கொள்வார்கள் என்று சொல்கின்ற அளவுக்கு எங்களுடைய மக்களை முட்டாள்கள் ஆக்கக்கூடிய அந்த அரசியல் விழிப்புணர்வினுடைய அந்த பரிணாம எல்லை இங்கு காணப்படுகின்றது.

இதன்படி கற்றுத் தேர்ந்த பாடங்களுக்கும், பல்கலைக்கழக கல்வி முறைக்கும் அப்பால் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய அரசியல் விழிப்புணர்வு சார்ந்து நாங்கள் சிந்திக்க வேண்டி உள்ளது.” என்றார்.