குற்றவாளிகளை அடையாளம் காணும் செயல்முறை அறிமுகம்

129 0

போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காணும் செயல்முறையை நெறிப்படுத்தும் புதிய அமைப்பை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களையும் இணைக்கும் விசேட தரவு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய முறையின் கீழ் போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபரின் உள்ளீட்டையும் செயல்படுத்துவதன் மூலம் பொலிஸாரினால் கடந்த கால குற்றவியல் பதிவுகளை மீட்டெடுக்க முடியும்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான அனைத்து கைதுகளின் விவரங்களும் தரவு அமைப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தரவு அமைப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்று  பொலிஸ் தலைமையகத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

அதன்போது மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள்  பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோருக்கு திட்டமிடப்பட்ட விசேட போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.