யாழில் கடற்தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்

135 0

யாழ்ப்பாணத்தில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டமானது இன்று(14.12.2023) இலங்கை கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடு எனும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வரைவு கடற்றொழில் சட்டத்தை நிராகரிக்கின்றோம், இலங்கைக் கடற்பரப்பில் வெளிநாட்டு கடற்றொழில் கப்பல்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவதை முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம், கடல் உணவு இறக்குமதியால் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கடல் உணவு இறக்குமதியை எதிர்க்கின்றோம்.

கடற்றொழில் சமூகத்திற்கு 2024 இற்கான வரவு- செலவுத் திட்டத்தில் போதிய ஒதுக்கீடு இன்மையையும் பொருத்தமற்ற அரச கொள்கைகளையும் மாற்றியமைத்து கடற்றொழில் வாழ்வாதாரங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டும், கடந்த பல வருடங்களாக இந்திய இழுவைமடிப் படகுகளால் பாதிக்கப்பட்டுவரும் வட இலங்கை கடற்றொழில் சமூகங்களுக்கும் நியாயமான தீர்வுகளை முன்னெடுக்குமாறு கூறுகின்றோம் போன்ற ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், “கடந்த பல வருடங்களாகப் பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா நெருக்கடியால் கடற்றொழில் சமூகம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இவ்வாறான துயர் மத்தியில் வாழும் கடற்றொழில் சமூகத்தை  பாதிக்கும் அரச கொள்கைகளை மாற்றி எமது சமூகத்துக்கு விடிவு வழங்குமாறு கேட்டு இந்த மகஜரைக் கையளிக்கின்றோம்” என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.