வத்திக்கான் அதிகாரபூர்வ ஊடக தகவலின்படி, இதுவரை போப் பதவி வகித்த 7 பேரின் கல்லறைகள் வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிலேயே கட்டப்பட்டுள்ளன.
ஆனால், அங்கு தனக்கான கல்லறை அமைக்கப்பட விரும்பாமல், சான்டா மரியா மேகியார் (santa maria maggiore) பசிலிக்காவில் தனது கல்லறை அமைக்கப்பட வேண்டும் என தான் விரும்புவதாக 87 வயதான போப் பிரான்ஸிஸ் கூறியிருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
போப் பிரான்சிஸ் அந்த பேட்டியில், ரோமில் உள்ள நான்கு போப்பாண்டவர் தேவாலயங்களில் சான்டா மரியா மேகியோர் தேவாலயமும் (பசிலிக்கா) ஒன்று. இந்த தேவாலயத்துக்கும் தனக்கும் இடையே நெருங்கி தொடர்பு இருப்பதாக உணர்வதாகவும் கூறியுள்ளார்.
தான் போப் பதவியில் அமர்வதற்கு முன்னர் ரோம் நகருக்கு செல்கிற போதெல்லாம், வார இறுதி நாட்களில் சான்டா மரியா மேகியோர் தேவாலயத்துக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், 2013இல் இவர் போப் பதவியை அடைந்த பின்னரும் இந்த தேவாலயத்துக்கு சென்று வழிபட்டுள்ளதாகவும், தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னரும் கூட சான்டா மரியா மேகியோர் தேவாலயத்தில் வழிபட்டதாகவும் உணர்வு மேலிட பேட்டியில் குறிப்பிட்டார், போப் பிரான்சிஸ்.
போப் பிரான்சிஸின் கல்லறை பற்றிய அறிவிப்பின்படி, நூறாண்டுகளுக்குப் பின்னர், வத்திக்கான் நகருக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப்பாண்டவர் இவர் என்பது வரலாற்றுப் பதிவாகிறது.
நூறாண்டுகளுக்கு முன்னர் போப் 8ஆம் லியோ 1903இல் வத்திக்கான் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அல்லாமல், நகருக்கு வெளியே, ரோமில் உள்ள செய்ன்ட் ஜோன் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போப் பிரான்சிஸ் தனது கல்லறை அமைக்கப்பட வேண்டிய இடம் எது என்பதை அறிவிக்கும் விதமாக, “ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் எனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்” என நேற்று (13) மெக்சிகோ ஒளிபரப்பான டெலிவிசாவின் N+ ஸ்ட்ரீமிங் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.