விளையாட்டு உபகரணங்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

25 0

விளையாட்டு உபகரணங்களின் அதிகரித்த விலை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அது தொடர்பான சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் விவகார, விளையாட்டுத் துறை அமைச்சர்  ஹரீன் பெர்னாண்டோ  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13)  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில்  கிங்ஸ் நெல்சன் எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் எம்பி தமது கேள்வியின் போது, விளையாட்டு மைதானங்களின் பராமரிப்பு தொடர்பிலும் விளையாட்டு உபகரணங்களின் விலைகள்  வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனால்   பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பிலும் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என கேட்டார்.

அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் பெருமளவு விளையாட்டு மைதானங்கள் காணப்படும் நிலையில் அவற்றைப் பராமரிப்பது தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

அதனால் தனியார் துறையினருடன் இணைந்து அது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கிளிநொச்சி விளையாட்டு மைதானம் 400 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டது. எனினும் அதன் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது அது தேசிய அநீதி என்றே குறிப்பிட வேண்டும்.

அது தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியது யார் என்பது தொடர்பிலும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். அதே போன்று விளையாட்டு மைதானம் அமைக்கப்படாமலே பார்வையாளர் அரங்க மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மோசமான செயற்பாடுகளை யார் செய்கின்றார்கள் என்பது புரியவில்லை. அது தொடர்பில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

விளையாட்டு மைதானங்களில் பராமரிப்பு தொடர்பில் தற்போது நாம் டயலொக் மற்றும் டெலிகொம் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றோம்.

அவ்வாறு இடம்பெறும் போது மாகாண மட்டத்தில் உள்ள சிறுவர்களுக்கு விளையாட்டு மைதானத்திற்குள் பிரவேசிப்பதற்காக அனுமதி பத்திரத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக நீச்சல் தடாகங்கள் போன்றவற்றை பராமரிப்பது பெரும் கஷ்டமான விடயம். அது தொடர்பில் விளையாட்டுத் துறை அமைச்சுக்கு உரிய அனுபவம் இல்லை. புல் வெட்டுபவரில் இருந்து பெரும்பாலான பதவிகள் அரசியல் ரீதியாக வழங்கப்பட்டுள்ளமையே அதற்கு காரணம்.

இதனால் முழு கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க ஒரு மாத காலத்திற்குள் அது தொடர்பான தீர்மானங்கள் முன் வைக்கப்படும். என்றார்.