கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி குளத்தின் மேற்பரப்பில் 1727 மில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டில் சூரிய மின்சக்தி திட்டம் நிறுவப்படவுள்ளது. இதற்காக அவுஸ்திரேலியாவின் யுனைற்றட் சோலர் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பூநகரி குளத்திலிருந்து புதிய கிளிநொச்சி உப மின் நிலையம் வரை தேவையான மின்கடத்திக் கட்டமைப்பை நிர்மாணித்தல் உள்ளிட்ட 100 வீத மின்கல வலுசக்தி காப்புக் கட்டமைப்புடனான 700 மெகாவொட் சூரிய மின்சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக யுனைற்றட் சோலர் எனர்ஜி கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்வதற்கும், கருத்திட்ட முன்மொழிவு மதிப்பீடு மற்றும் வலுசக்தியை கொள்வனவு செய்யும் கட்டணத்தை தீர்மானிப்பதற்காக அமைச்சரவைக்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவை நியமிப்பதற்கும் கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட விதந்துரைகளின் அடிப்படையில் யுனைற்றட் சோலர் எனர்ஜி கம்பனியுடன் உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துதல் மற்றும் அதற்குரிய மின்சாரத்தை கொள்வனவு செய்யும் உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

