விமல் வீரவங்சவையும் பிணையாளர்களையும் நாளை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!

106 0
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மற்றும் அவர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகிய பிணையாளர்களை புதன்கிழமை (13) உடனடியாக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க செவ்வாய்க்கிழமை (12) உத்தரவிட்டுள்ளார்.

விமல் வீரவங்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான செவ்வாய்க்கிழமை (12) வழக்கின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்த போது, தமது கட்சிக்காரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை 9 மணியளவில் தமக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை, விமல் வீரவங்சவின் பிணைகாரர்கள் நீதிமன்றில் ஆஜராகாதமை தொடர்பிலும் நீதிவானின் அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும் விமல் வீரவங்சவின் உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை புதன்கிழமை (13) நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.