இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில் இருந்து அனுப்பி வைக்கப்படுவதை அரசாங்கம் விரும்புகிறதா?

142 0

கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில் இருந்து நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதை அரசாங்கம் விரும்புகின்றதா என்று ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் வினவினார்.

இவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து இவ்வாறு தெரிவித்தபோது,  மேலும் குறிப்பிட்டதாவது :

இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சினை மிக பாரிய உலக நெருக்கடியாக தாண்டவமாடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கையில் நிலவி வருகின்ற டொலர் பிரச்சினைக்கு தீர்வினை எட்டுவதற்கு இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புகின்ற தீர்மானம் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

இஸ்ரேலியர்களின் கட்டுப்பாட்டு பிரதேசம் தற்போது பாரிய இரும்புக் கோட்டை போல் உள்ளது. முன்பு இஸ்ரேலியர்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு சென்று அங்கு வேலை பார்த்த பாலஸ்தீனர்களுக்கு இப்போது அனுமதி மறுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாகவே இலங்கையர்களை பணிக்கு அமர்த்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது.

இஸ்ரேலில் இறந்த இலங்கையர்களின் உடலங்கள் சில ஏற்கனவே நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அவை சிறியளவில் பதற்றத்தை ஏற்படுத்த செய்தன. ஆனால் கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட நேருமானால், மிக மிக மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட்டுவிடும்.

இஸ்ரேலிய உளவுப் படையான மொசாட் திட்டமிட்ட வகையில் இலங்கையில் மிக பாரதூரமான நெருக்கடியை உருவாக்கி ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கின்றதா என்கிற சந்தேகமும் எமக்கு உள்ளது. மேற்கத்தேய நாடுகளின் ஆசிர்வாதத்துடன் மொசாட்டின் கழுகு பார்வை இலங்கை மீது விழுந்திருக்கிறது என்று சந்தேகிக்கின்றோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பூகோள அரசியலை கரைத்துக் குடித்தவர். அவருக்கு இவற்றை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று கிடையாது. ஆனால், நாட்டுப் பற்றாளர் என்ற வகையில் அவருடைய மேலான கவனத்தை நாம் கோரி நிற்கின்றோம். இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புகின்ற தீர்மானத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.