வீடு தேடிச் சென்று உடைமைகளையும் சேதப்படுத்திய வன்முறைக் கும்பல்

65 0

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியிலுள்ள வீதியில் இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலொன்று, இளைஞரின் வீட்டுக்கும் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளம்போக்கட்டி பகுதியிலுள்ள வீதியில் வைத்து நேற்று புதன்கிழமை (6) மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞரை வழிமறித்த வன்முறை கும்பல், இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளது.

அவ்வேளை, இளைஞர் மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டுவிட்டு, அந்த கும்பலிடமிருந்து  தப்பி ஓடியுள்ளார்.

அதனையடுத்து, இளைஞரின் வீட்டுக்குச் சென்ற அந்த கூட்டத்தினர், வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்த உடைமைகளை அடித்து, உடைத்து சேதப்படுத்திய பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த இளைஞர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.