இலங்கை கடலில் சேதங்களை ஏற்படுத்திய எக்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் தாக்கல் செய்திருந்த வழக்கை தொடர சிங்கப்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி இந்த வழக்கு சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் ஜனவரி 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு முன்னதாக இலங்கை அரசின் சார்பில் நீதிமன்றத்தில் விரிவான முறைப்பாடு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் தற்போது இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் கப்பல் நிறுவனம் பூர்வாங்க ஆட்சேபனைகளை சமர்ப்பித்ததை அடுத்து நீதிமன்றம் உரிய அனுமதியை வழங்கியதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எக்பிரஸ் பேர்ள் தீ விபத்து மற்றும் கப்பல் மூழ்கியதன் காரணமாக இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை மீட்பதற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

