“மருத்துவராகுவதே எனது இலட்சியம்” யாழ். மாணவி

63 0

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்செயா அனந்தசயனன், மருத்துவராகுவதே தனது இலட்சியம் என்றார்.

சிறந்த பெறுபேற்றை பெற்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றதில் தமிழ் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையாக உள்ளது. பெறுபேற்றை கல்வி நடவடிக்கையில் ஒரு படிக்கல்லாகவே பார்க்கிறேன்.

உயிரியல் கற்கையை தெரிவு செய்து மருத்துவ பீடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே எனது இலட்சியம். பெற்றோருக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஞ்ஞான பாடத்திற்கும் ஆங்கில இலக்கியம், சிங்களம் ஆகிய தொகுதி பாடங்களுக்குமே தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சென்றேன்.கணித பாடத்தை தரம் ஆறு முதல் தந்தையிடமே கற்றேன்.

சாதாரண தர மாணவர்கள் சாதாரண பரீட்சையை உயர்தரத்திற்கான சிறு வழிகாட்டாலாக கருதி எதிர்கொள்ள வேண்டும் – என்றார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்செயா அனந்தசயனன் 9 ஏ பெறுபேறுகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கணித விரிவுரையாளராகவும் தாய் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றனர்.