மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த நிலையில், பிற கைதிகளால் தாக்கப்பட்டே இந்த கைதி மரணமடைந்ததாக இன்று (01) வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதென மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை கசிப்பு வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து குறித்த நபர் சிறைச்சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (28) சுகயீனமுற்றிருந்த காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்டதன் பிரகாரம், சடலம் நேற்று (30) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அவ்வேளை, குறித்த கைதி மொட்டையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழக்க நேரிட்டதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த கைதி, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளுடன் முரண்பட்டதாகவும், அதனால் அந்தக் குழுவினர் அவரைத் தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

