மாகாண சபைத் தேர்தலை நடத்தும் வாய்ப்பை பெற கட்சிகள் செய்ய வேண்டியது என்ன ?

133 0

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படுவதன் மூலம் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான  ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில், மாகாணசபை தேர்தலை நடத்துவதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் யோசனைக்கு எதிர்க்கட்சி முழுமையான ஆதரவை வழங்கத் தயார்.

அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும் கடந்த எட்டு மாதங்கள் காலதாமதமாகி இன்னும் அந்த தேர்தல் நடத்தப்படவில்லை.  நாட்டு மக்கள் அதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றார்.

இதற்கு பிரதமர் தொடர்ந்து பதிலளித்து உரையாற்றுகையில்,

தற்போது மாகாண சபை தேர்தலை நடத்துமாறு குரல் எழுப்பும் லக்ஷ்மன் கிரியெல்ல அப்போது அவர் சபை முதல்வராக பதவி வகித்த போது அதற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

அவர்கள் கொண்டு வந்த சட்டத்தின் விளைவாகவே இன்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுகிறது.

இங்குள்ளவர்கள் ஜனாதிபதியை சந்திக்க செல்லும்போது அது தொடர்பில் தெரிவிக்க முடியும் எனினும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றே அங்கு கேட்கின்றனர்.

எவ்வாறெனினும் தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டால் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியுமாகும் என்றார்.