வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கி இளைஞன் மரணம் : 4 பொலிஸார் கைது

75 0

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் சித்திரவதைக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் நாளைமறுதினம் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு தயார்ப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளையிட்டார்.

சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

25 வயதுடைய இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்ததை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகராசா அலெக்ஸ் (வயது 25) என்பவர் நவம்பர் 8 ஆம் திகதி வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் அவரது நண்பருடன் இணைந்து திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, நவம்பர் 12 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவதற்கு முன்னர் பொலிஸ் காவலில் இருந்தபோது கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நேற்று  விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, வாக்குமூலங்கள் மற்றும் நீதிமன்றில் சமர்ப்பித்த சட்ட மருத்துவ வல்லுநரின் அறிக்கையின் அடிப்படையில் ஆட்கொலை என விளம்பல் வழங்கினார்.

சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முக்கிய சாட்சியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அதைத் தொடர்ந்து சணட்ட மருத்துவப் பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சித்திரவதைக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோகதர் உள்பட நால்வரும்  கடந்த திங்கட்கிழமை முதல் பொலிஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட குழு விசாரணைகளை முன்னெடுத்தது.

அந்தக் குழுவினரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று நண்பகல் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். நால்வரையும் நாளைமறுமதினம் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நாளை மறுதினம் திங்கட்கிழமை மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.