மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தலுக்கு நீதிமன்றம் அனுமதி

51 0

ன்னார், அடம்பன் பிரதேசத்தில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள உயிர் நீத்தவர்களுக்கான நினைவேந்தலுக்கு எதிராக அடம்பன் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் இன்று சனிக்கிழமை (25) தடை உத்தரவு கோரியிருந்த நிலையில், நீதிமன்றமானது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர அனுமதி வழங்கியுள்ளதாக சட்டத்தரணி எஸ்.டினேசன் தெரிவித்தார்.

இவ்வழக்கு விசாரணை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் 26, 27ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள உயிர் நீத்தவர்களுக்கான நினைவேந்தலுக்கு எதிராக அடம்பன் பொலிஸார் இன்று மன்னார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரியிருந்தனர்.

குற்றவியல் நடைமுறைக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் இத்தடை உத்தரவை அடம்பன் பொலிஸார் கோரினர்.

இந்த வழக்கு இன்று பகல் நீதிமன்றத்தில் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ முன்னிலையில் இடம்பெற்றது.

இவ்வழக்கில் சுமார் 20 பேரின் பெயர்கள் தனி நபர்களாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட 20 பேரின் பெயர்களையும், 21வதாக பொது மக்களையும் குறிப்பிட்டு இத்தடை உத்தரவு கட்டளையினை பொலிஸார் கோரியிருந்தனர்.

பதில் நீதவான் முன்னிலையில் விசாரணை இடம்பெற்றபோது, நினைவேந்தலை அமைதியான முறையிலும், அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் நினைவுகூர மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், நினைவேந்தல் நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான இலச்சினைகள் மற்றும் கொடிகளை பயன்படுத்தாமல், அமைதியான முறையிலான நினைவுகூரலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என சட்டத்தரணி தெரிவித்தார்.

அத்தோடு, முருங்கன் பொலிஸார் 4 நபர்களுக்கு எதிராகவும், மடு பொலிஸார் 2 நபர்களுக்கு எதிராகவும் தடை உத்தரவு கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.