இலங்கையில் குழந்தைகள் கடத்தப்பட்டு வெளிநாட்டவர்களுக்கு விற்பனை : விசாரணைகள் தீவிரம் !

44 0

இலங்கையில் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த குற்றங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிவான் பிரசன்ன அல்விஸிடம் நேற்று (23) தெரிவித்துள்ளனர்.

அதிகளவிலான குழந்தைகள் கண்டி பிரதேசத்தில் இருந்து கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கடத்தல் தொடர்பாக நோர்வேயில் இருக்கும் இலங்கை பிரஜை ஒருவரிடம் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை விரைவாக மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உயர் நீதிமன்ற நீதிவான் பிரசன்ன அல்விஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவித்துள்ளார்.