டென்மார்க் ஓகூஸ் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு.


410 0

தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் வித்தாகி போன மறவர்களை நினைவு கூரும் முகமாக, டென்மார்க் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஓல்போக், கொப்பனேகன் மற்றும் ஒடன்ஸ்ச பல்கலைக்கழக மாணவர்களைத் தொடர்ந்து இன்று 23.11.2023 ஓகூஸ் பல்கலைக்கழக மாணவர்களாளும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் இடம் பெற்றுள்ளது.

ஈழ மண்ணின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை ஈகம் செய்த கார்த்திகை மைந்தர்களின் நினைவைச் சுமந்து, கொடிவணக்கம், பொதுச் சுடரேற்றல், ஈகைச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம், அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து மாவீரர் நினைவுகளைச் சுமந்த கவிதைகள், மாவீரர் கானங்கள், நடனம், சிறப்புரைகள், விபரணக் காட்சிப்படுத்தல் என நிகழ்வுகள் எமது இளைய தலைமுறையினரால் மிகுந்த எழுச்சியுடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. 

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுப்பது போல், எமது அடுத்த தலைமுறையினர் கடந்த ஆண்டு போல் இவ்வாண்டும் டென்மார்கின் முதன்மையான நான்கு பல்கலைக்கழங்களில், தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளைச் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்து நினைவு கூரியுள்ளனர்.

 அத்தோடு எதிர்வரும் 27.11.2023 அன்று கேர்ணீங் மற்றும் கொல்பேக் நகரங்களில் நடைபெறவுள்ள, தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.