வட்டுக்கோட்டை பொலிஸாரிடமிருந்து பறிக்கப்பட்ட அலெக்ஸின் வழக்கு: நீதிக்காக போராடுவோம் என்கிறார் சுகாஷ்

49 0

வட்டுக்கோட்டை பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட அலெக்ஸின் வழக்கு வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பிடுங்கப்பட்டிருக்கின்றது என சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இன்று (21.11.2023) அவரால் வெளியிடப்பட்ட ஒரு காணொளியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் அக்காணொளியில், வட்டுக்கோட்டை பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட அலெக்ஸ் மற்றும் மற்றைய சந்தேகநபருடைய வழக்கில் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தோம்.அலெக்ஸோடு கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபரை நாம் பிணையில் விடுதலை செய்துள்ளோம்.

பொலிஸாரின் சித்திரவதைகளால் தான் அலெக்ஸ் கொல்லப்பட்டிருக்கிறார் என்ற விடயத்தையும் நாங்கள் நீதிமன்றத்தினுடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றோம்.

இந்த வழக்கில் நாம் மல்லாகம் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கை என்னவென்றால், குற்றமிழைத்த வட்டுக்கோட்டை பொலிஸார் இந்த வழக்கினை விசாரிக்காது வேறு பிரிவினருக்கு இது மாற்றப்பட வேண்டும் என்பதாகும்.

எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றத்தால், வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து வழக்கு பிடுங்கப்பட்டிருக்கின்றது. எங்களால் முடிந்த வரை இந்நாட்டில் நீதிக்காக நாம் போராடுவோம் என கூறியுள்ளார்.