அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை கடந்த 7-ந்தேதி விசாரித்த தனி நீதிபதி என்.சதீஷ்குமார், அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு 15-ந்தேதி (இன்று)விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.அதன்படி இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆகியோர் ஆஜராகி, ‘தனி நீதிபதி என். சதீஷ்குமார் பிறப்பித்த இடைக்கால உத்தரவு அசல் ஆவணம் இதுவரை கிடைக்கவில்லை.
அதை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். அதுவரை ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடுகளை பயன்படுத்தக் கூடாது என்று தனி நீதிபதி பிறப்பித்த தடையை நீக்க வேண்டும்’ என்று வாதிட்டனர்.அதற்கு நீதிபதிகள் அந்த இடைக்கால தடையை நீக்குவதற்கு என்ன அவசரம் ஏற்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கை நாளை (16-ந்தேதி) காலையில் முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்

