பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காகவே போராடுகின்றோம்

67 0

திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு புதன்கிழமை (15) காலை இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவி நாங்கள் நிதிக்காக போராடவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காகவே போராடுகின்றோம். எமக்கு இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.

அவர்களுக்கு இதுவரையில் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை. ஆனால் இலங்கை அரசு அதனை புறம்தள்ளிவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக வரவு செலவு திட்டத்தில் 1000 மில்லியல் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

நாங்கள் நிதிக்காக போராடவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காகவே போராடுகின்றோம். எமக்கு இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை.

சர்வதேச விசாரணை ஒன்றே எமக்கான நீதியை பெற்றுத்தரும். எனவே அதை வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.

சர்வதேச சமூகத்தின் பார்வையில் எங்களுடைய போராட்டம் பேசுபொருளாக மாறி உள்ள நிலையில்  சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாக இம்முறை வெளியிடப்பட்ட வரவுசெலவு திட்டத்தில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்ட விடயம் கண்டனத்துக்கு உரியது.

இவ்வருடம் பொங்கல் தினத்தில் யாழ்ப்பாத்தில்வைத்து யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை என தெரிவித்த ஜனாதிபதி இப்போது குறித்த விடயத்திற்காக நிதி ஒதுக்குவதாக தெரிவித்திருக்கின்றார் அப்படியானால் எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதனை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா? என கேள்வி எழுப்புகின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் தொடர்ச்சியாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவே போராடி வருகின்றோம். இந்நிலையில்  எங்களுடைய போராட்டத்தை சிதைக்கும் வகையில்  அதற்கு இழப்பீடு வழங்குவதாகக்கூறி  சர்வதேச சமூகத்தை ஏமாற்றப் பார்க்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.