கிளிநொச்சியில் மட்டுப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகம்

74 0

கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் விநியோகிக்கப்பட்ட குடிநீர் விநியோகமானது ஞாயிற்றுக் கிழமை (12) முதல் மட்டுப்படுத்தப்பட்ட நேரத்திற்கு மட்டுமே விநியோகிப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கிளிநொச்சி குளத்து நீரில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக போதுமான நீரை சுத்திகரித்து விநியோகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதனால்  குடிநீர் விநியோகித்தை மட்டுப்படுத்தி விநியோகிக்க தீர்மானிக்க பட்டுள்ளதாகவும் இதன்படி கிளிநொச்சி டிப்போச் சந்தி, பரந்தன், பூநகரி, பொன்னகர் ஆகிய நீர்த்தாங்களிலிருந்து நீர் பெறும் கிராமங்களுக்கு பின்வரும் ஒழுங்கின் பிரகாரம் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பூநகரி  பிரதேசத்திற்கு தினமும்  பிற்பகல் மூன்று 3 முதல் இரவு 10 வரைக்கும், பரந்தன் நீர் தாங்கியிலிருந்து நீர் பெறுகின்ற பரந்தன், உமையாள்புரம், தட்டுவன்கொட்டி,ஆனையிறவு பிரதேசங்களுக்கு தினமும் காலை 8 மணி முதல் பகல் 11  மணி வரைக்கும், பொன்னகர் நீர்த்தாங்கியிலிருந்து நீரை பெறுகின்ற பொன்னகர், பாரதிபுரம், மலையாளபுரம்,  கிராமங்களுக்கு தினமும் காலை 7 முதல் முற்பகல் 10 வரைக்கும், கிளிநொச்சி டிப்போச் சந்தி நீர்த்தாங்கியிலிருந்து நீரை பெறுகின்ற கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு தினமும் காலை 7 மணி முதல்  பிற்பகல் 3 மணி வரைக்கும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

எனவே பொது மக்கள் மேற்படி நேரகாலத்தை கருத்திற்கொண்டு செயற்படுமாறும், கிளிநொச்சி குளத்தின் நிலைமை வழமைக்கு திரும்பும் வரை இந் நடவடிக்கை செயற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.