ஒரு வருடத்துக்கு முன்னர் நாட்டு மக்கள் கஷ்டப்பட்டபோது உணர்வற்ற எதிர்க்கட்சியினர், தற்போது கிரிக்கட் விவகாரத்தில் அக்கறை காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கிரிக்கட் தொடர்பான பிரச்சினையில் தற்போது எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபமடைய முயற்சிப்பதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இன்று (8) பாராளுமன்றம் கூடியது. கிரிக்கட் நிர்வாக சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினது உரையின் பின்னர், எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்வினையால் பாராளுமன்ற கூட்டம் சூடுபிடித்தது.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
சஜித் பிரேமதாச கூறுகையில்,
கிரிக்கட் நிர்வாக சபை குறித்து இந்த நாடாளுமன்றத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றுவோம். ஊழல் நிறைந்த கிரிக்கட் நிர்வாக சபையை வீட்டுக்கு அனுப்ப அரசும் எதிர்க்கட்சியும் இணைந்து பாடுபடுவோம். பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு மத்தியில் ஒளிந்துகொள்ளாமல் பணிகளை செய்வோம்.
வெட்கமற்ற சட்ட அமுலாக்கத்துக்கு, ஒளிந்துகொள்ளாமல் வேலையைச் செய்வோம். இது தொடர்பாக பிரதமர் மற்றும் ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமின்றி, அரசும் எதிர்க்கட்சியும் இணைந்து இந்தப் பணியைச் செய்ய வேண்டும். இந்த ஊழல் கிரிக்கட் நிர்வாகத்தை வீட்டுக்கு அனுப்புவோம். அதற்காக வித்தியாசம் பார்க்காமல் ஒன்றுபடுவோம் என்றார்.
இதன்போது சபையினர் உரக்க சத்தம் எழுப்பியவேளை, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரை பேசும்படி அழைத்தார்.
அதன் பிரகாரம், ஆளும் கட்சியின் (ஸ்ரீ.பொ. பெ.) பிரதம அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கையில்,
கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, கிரிக்கட் சபை திருடர்களின் கூடாரம் என நான் இந்த சபையில் நேற்று தெரிவித்தேன். அதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் எடுத்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பு குறித்து நான் பேசப்போவதில்லை. அந்த முடிவுகளை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லை.
எதிர்க்கட்சித் தலைவர் கிரிக்கட்டை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார். கடந்த வருடம் நாட்டில் அதிகமான பிரச்சினைகள் ஏற்பட்டன.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது ஒன்று சேராதவர்கள் அப்போது செய்தது போல் இப்பிரச்சினையிலும் அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கின்றனர். “ஹூ” என்று சொல்லி தமது இனத்தினை காட்டிக்கொண்டால் எனக்கு ஒன்றும் இல்லை என்றார்.
அப்போது சபையில் ஒரே கூச்சல் சத்தம் எழுந்தது.
அதற்கு அமைச்சர்,
பைத்தியம் போல் கத்தாதீர்கள். சொல்வதைக் கேளுங்கள். நாட்டு மக்கள் கஷ்டப்படும்போது உணர்வற்ற எதிர்க்கட்சிகள் கிரிக்கட் விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
விளையாட்டுத்துறை அமைச்சரின் கருத்துடன் நாங்கள் உடன்படுகிறோம். ஆனால், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ள பணிகளையும் நாம் செய்ய வேண்டும். எதிர்க்கட்சித் தலைவருக்கு பிரேரணை ஒன்றைக் கொண்டுவர வேண்டுமாயின், அதனைக் கொண்டு வாருங்கள். நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்லர். உதவி செய்வோம் என்றார்.

