திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு ஆறாம் கட்டை ஐயப்பன் கோயிலில் பூசை உதவியாளராக கடமையாற்றி வந்த 14 வயதான சிறுவன் மின்சாரம் தாக்கி புதன்கிழமை (08) உயிரிழந்துள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மஹர ஜோதி மண்டல பெருவிழா இடம் பெறவிருக்கின்ற நிலையில் குறித்த கோயிலில் நிறம் பூசும் வேலைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் பூசை உதவியாளரான குறித்த சிறுவன் கோயிலின் மேல் மாடிக்குச் சென்று மின் குமிழ்களை பொருத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் மின்சாரம் தாக்கியதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், டயகம பகுதியைச் சேர்ந்த திருச்செல்வன் லுகநாத் (14வயது) எனவும் தெரியவருகிறது.
பகல் சமையலுக்கு இச்சிறுவன் உதவி செய்து தருவான், அச்சிறுவன் கோயிலுக்கு மேலே இருந்தான். இரண்டு மூன்று தடவைகள் அழைத்தேன் எனினும், வருகின்றேன், வருகின்றேன் என்றே பதிலளித்தார்.
“பத்து நிமிடங்கள் கடந்து விட்டன. அச்சிறுவன் வராத படியால் வெளியே வந்து கோயிலின் மேல் பகுதியை பார்த்தேன். கையில் கொறடை வைத்துக்கொண்டு வீழ்ந்து கிடந்தான். இதனையடுத்து அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை கூப்பிட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்” என பூசாரியின் மனைவியார் வாக்குமூலமளித்துள்ளார்.
உயிரிழந்த உதவி பூசாரியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

