தரம் குறைந்த எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை

40 0

இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் தரம் குறைந்தது என ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அதனை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பான உண்மை தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் கேள்வி நேரத்தில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சிங்கப்பூரில் இருந்து 40000 மெட்ரிக் டொன் டீசலை ஏற்றிக்கொண்டு கடந்த 5ஆம் திகதி  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள  போஸ் பவர் என்ற கப்பலின் எரிபொருள் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், குறித்த எரிபொருள் பாவனைக்கு உகந்த நிலையில் இல்லை என இரு ஆய்வக அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவ்வாறு இருந்தபோதும் கொலன்னாவை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தரமற்ற எரிபொருளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் எமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இது தொடர்பான உண்மைத் தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.அத்துடன் இந்தியன் ஒயில் நிறுவனத்தின்  கோரிக்கையை ஏற்று இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் வெளியான அறிக்கைகளின் பிரகாரம் இந்த எரிபொருள் தரத்தில் குறைவாக இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தரத்தில் குறைந்தது என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை விநியோகிக்க முடிவு செய்வது ஒரு ஆபத்தான விடயமாகும்.

அதனால் தரம் குறைந்த எரிபொருள் விநியோகிப்பதன் சதித்திட்டத்தின் பின்னணி தொடர்பாகவும் இதன் மூலம் இடம்பெற்றிருக்கும் மோசடி கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும்.

அதேபோல் தரம் குறைந்த எரிபொருளை விநியோகிப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பில் பிரதமர் முன்வந்து விசாரணை நடத்தி இதன் உண்மைத்தன்மையை சபைக்கு வெளியிட வேண்டும் என்றார்.