நீதவானின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய பொலிஸ் அதிகாரிகள்

39 0

நுவரெலியா நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள், நீதவானின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதையடுத்து நீதிமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் திங்கட்கிழமை (06) வழக்குகளில் ஆஜராகாமல் இருந்தமையால் நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், திறந்த நீதிமன்றில் சந்தேகநபர்கள் முன்னிலையில் நீதவான் பொலிஸ் உத்தியோகத்தர்களை பல மாதங்களாக, அவமதித்து வருவதாகக் கூறுகின்றனர்.

இது குறித்து நுவரெலியா பிரதான பொலிஸ் அத்தியட்சகருக்கு முதலில் அறிவித்ததாகவும், அதற்கு தீர்வு கிடைக்காததால் நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் (06) முற்பகல் 11.30 மணியளவில் நீதிமன்ற நடவடிக்கைகளை விட்டு வெளியேறியதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டயகம, அக்கரபத்தன, தலவாக்கலை, லிந்துல, நானுஓயா, பட்டிபொல, கந்தபொல பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் (06) தமது கடமைகளை விட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ​​சம்பவம் தொடர்பில் நீதவானைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.