களவு திருட்டு தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டுகோள்

45 0

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் அதிகரித்து வரும் களவு திருட்டு தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பொது மக்களை சம்மாந்துறை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாடுகள் அதிகமாக களவாடப்படுவதாகவும் .இவ்வாறு களவாடப்படும் மாடுகள் அறுவைக்கு உள்ளாக்கப்பட்டு பங்கு இறைச்சியாக விற்பனை செய்யப்படுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக   பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆகவே பொது மக்கள் தங்களுக்கான இறைச்சியை கடைகளில் பெற்றுக் கொள்வதே சிறந்ததாகவும் பங்குகளுக்காக வெட்டப்படும் மாடுகளில் அதிகமானவை களவாடப்பட்ட மாடுகளாகவே உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக பொலிஸாருக்கு அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக மேலும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவே பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். மாடுகளை வைத்திருப்போர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.மேலும் அதிகமானவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அருகில் இருக்கும் அயல்வீட்டு உறவினரிடம் நாம் வெளியே செல்வதாகவும் கூறி , வீட்டில் உள்ள அனைவரும் வெளியே செல்கின்றனர்.

சில நேரங்களில் அதை முகநூலிலும் பதிவிடுகின்றனர். அதை தொடந்து திருடர் அவ்வாறான வீடுகளை இனங்கண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர் . மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறும் இந்த வருடம் மாத்திரம் 03 மோட்டார் வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அவற்றை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் வயல் வேலைகளில் ஈடுபடுவதற்காக செல்வோர் வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தும் போது பாதுகாப்புத்தன்மையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.சம்மாந்துறை பிரதேசத்தில் இவ்வாறான குற்றச் செயலில் அதிகமாக போதைபொருள் பாவனையில் உள்ளவர்களே ஈடுபடுகின்றதாக தெரிவித்தனர்.

எனவே இரவு நேரத்தில் உங்களுடைய பிரதேசங்களில் சந்தேகத்திற்கு இடமாக யாரும் நடமாடினால் உடனடியாக சம்மாந்துறை பொலிஸாரிடம் அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.