திருகோணமலை மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும் திருகோணமலையை காப்பாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் எஸ். குகதாசன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் 02.11.2023 அன்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான நிலத்தில், 23 விகாரைகளின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் 31 விகாரைகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வனப்பாதுகாப்பு திணைக்களம் 43435 ஏக்கர் காணியினையும், தொல்பொருள் திணைக்களம் 2605 ஏக்கர் காணியினையும், புல்மோட்டை அரசி மலை பௌத்தப்பிக்கு கிழக்கு செயலணி 2908 ஏக்கர் காணியினையும் ஆக்கிரமித்துள்ளனர்.
மேலும் அண்ணளவாக முப்பது ஆயிரம் ஏக்கர் காணியை வனவிலங்கு திணைக்களம் தங்களுக்குரியது என தெரிவித்து வருவதால் 28 ஆயிரம் கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை இன்றி பண்ணையாளர்கள் அவதியுற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட கிளை பொருளாளர் வெள்ள தம்பி சுரேஷ் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

