பாணந்துறையில் பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றவர் கைது

32 0

பாணந்துறையில் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பாணந்துறை மோதரவில பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஆவார்.

வீதி சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபரை மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சோதனையிட்ட போது அதிகாரிகளுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட அவர் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து அவர் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசாரணையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் மன்னா கத்தி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.